இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என
கூறப்பட்டுள்ளது. இம் மாகாணங்களில் அதி கூடிய மழை வீழ்ச்சியாக 75 மில்லி மீற்றர் தொடக்கம் 100 வரையான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பனி மூட்டம் காணப்படும்.
மேலும் கடலை அண்டிய பிராந்தியங்களிலும் அதிக மழை பெய்யும். வட கிழக்கிலிருந்து வீசும் காற்றின் நேரடித் தாக்கமானது மட்டக்களப்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையான கடல் பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படுவதோடு தெற்கிலிருந்து தென் மேற்காக வீசும் காற்றின் தாக்கமானது காலி தொடக்கம் அம்பாந்தோட்டை வரையிலும் காணப்படும். இப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரையில் காணப்படும்.
காங்கேசன் துறையிலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் சற்று அதிகமாகக் காணப்படும். இப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும். கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது தற்காலிகமாக மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். எனவே கடற் தொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மின்னேரியாப் பகுதியில் 118 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கண்டி மாவட்டத்தின் சோகம பகுதியில் 115 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பாசிக்குடா பகுதியில் 97.5 மி.மீ, குச்ச வெளிப் பிரதேசத்தில் 94 மி.மீ, அநுராதபுரத்தில் 92.4 மி.மீ, அம்பாறை புரோபஸ் குளம் பிரதேசத்தில் 90.2 மி.மீ, மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
பொத்துவில் தீவாவி, மற்றும் பிப்பிலை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை எதிர்பார்க்கப்படுகிறது. அதிக மழை பெய்யும் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக