புதன், 13 மார்ச், 2019
பூச்சி மருந்து அனைவருக்கும் அவசியமா ?
வீட்டில் யாருக்காவது வயிற்றுவலியா? சருமத்தில் திடீர் அரிப்பா? பசியே இல்லை என்கிறார்களா? பூச்சி மருந்து கொடுத்துப் பார்க்கச் சொல்லி பெரியவர்கள் அறிவுறுத்துவதைக் கேட்டிருப்போம். யாருக்கு பூச்சி மருந்துகள் அவசியம்? ஏன் அவசியம்? எத்தனை நாட்களுக்கொரு முறை எடுத்துக் கொள்ள
வேண்டும்? என விளக்குகிறார் பொதுநல மருத்துவர் கலைமதி.
“குழந்தைகளை பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை குடற்புழுத் தொல்லை. அசுத்தமான இடங்களிலும், மண் தரையிலும், தண்ணீரிலும் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, குழந்தைகளும் பெரியவர்களும் காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது, சமையலுக்கு முன் காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறுவது போன்ற சுகாதாரமற்ற பழக்கங்களே குடற்புழு ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.
பூச்சிகள் இருந்தால், சரியாக சாப்பிடாமல் மெலிந்து, நிறம் வெளிறி காணப்படுவார்கள். சிலருக்கு வறட்டு இருமல், இளைப்பு மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சாலையோர உணவகங்களில் கைகளால் நேரடியாக உணவு பரிமாறப்படுவதால் அமீபியாசிஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் வயிற்று வலியால் அவதிப்படுவார்கள்.
அடிக்கடி மலம் கழிக்க வேண்டியது போல உணர்வார்கள். குடற்புழுத் தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சருமத்தில் வெள்ளைத்திட்டுகள் தோன்றி அரிப்பு ஏற்படும். சில புழுக்கள் ஆசன வாயிலில் முட்டை இடுகின்றன. இதனால், அந்த இடத்தில் இரவில் அதிக அரிப்பு ஏற்படும். அறியாமல் சொறிந்து கொண்டு, அதே கைகளை குழந்தைகள் வாயில் வைக்கும்போது, பூச்சிகள் மீண்டும் உடலுக்குள் செல்வது ஒரு தொடர் சுழற்சியாகவே நடைபெறும்.
கொக்கிப்புழு நாளொன்றுக்கு 0.2 மி.லி. இரத்தத்தை உறிஞ்சிவிடும். இதனால் இந்தப் புழு தாக்கியுள்ள நபருக்கு வயிற்றுப் பிரச்சினைகளோடு இரத்தசோகை நோயும் ஏற்படும். இரத்தசோகை, சோர்வு, வெளிறிய முகம் போன்ற அறிகுறிகள் தோன்றும் போது பெரியவர்களும் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.குடற்புழுவை ஒழிக்கப் பெரியவர்களுக்கு மாத்திரைகளும், குழந்தைகளுக்குத் திரவ மருந்தும் கொடுக்கப்படுகிறது.
பலவகைப் புழுக்கள் இருப்பதால், மேற்கூறிய அறிகுறிகள் இருப்பவர்கள் எந்தப் புழுவின் பாதிப்பு உள்ளது என்பதை மலப் பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப மருத்துவர் கூறுவது போல குடற்புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை உள்ளுக்குள் மருந்து கொடுக்க வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், அதிகமாக பாதையோர கடைகளில் சாப்பிடுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் செய்து கொள்வது மிகமிக அவசியம்.
அவரவர் வயதுக்கேற்றபடியும், நோய் அறிகுறிகளுக்கு ஏற்றவாறும் மருந்துகளும் அளவும் மாறுபடும் என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படியே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். மாறாக தாங்களாகவே மருந்துக் கடைகளில் கிடைக்கும் De-worming மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.
மேற்கூறிய முறைகளை தவறாமல் கடைபிடித்தால் குடற்புழுக்கள் 100 சதவிகிதம் அழிந்துவிடும். புழுக்கள் அழியும்போது தானாகவே சருமத்தில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள், தடிப்புகள் போன்றவையும் மறைந்துவிடும்” என்று அறிவுறுத்துகிறார் டாக்டர் கலைமதி.
Source: வீரகேசரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக